இதயத்தின் கிறுக்கல் 2

 

இன்று !!!!

பழைய ஹிந்தி பாடல்கள்களுடன் நினைவுகளும் பின்னோக்கி செல்கிறது. 
புதன்கிழமைகளில் ரேடியோ சிலோனில் அமீன் சயானியுடன் பினாகா கீத்மாலா ! அம்மா அப்பா சாரதா பாட்டி அந்த ரேடியோவை சுற்றி.... புரிந்தும் புரியாமலும் பாலு, நான், பாப்பு ......
மீண்டும் சிலவருடங்களுக்கு பிறகு மஞ்சயே கீத் , ஜெய்மாலா , பூலே பிஸ்ரேகீத் என்று விவிதபாரதியில் ...
இன்று அந்த நாட்கள் கடந்து கைபேசியில் எல்லாம்... ஆனால் அந்த சந்தோஷம் பறந்து விட்டது ...... 
தேடுதுவது அதைத்தானோ! சந்தோஷத்தையா ? இல்லை நம்முடன் இருந்த உறவுகளையா ?
நின்று திரும்பி பார்க்கும் போது ஒரு பெரிய திரைப்படம் போல ஓடுகிறது நம் கடந்த கால வாழ்க்கை . 
உள்ளே நுழையும்போதே ஜெயம்மா என்று கூப்பிடும் GS, எப்போதும் பேசாமல் திடீரென்று ஜோக் அடிக்கும் அப்பா, சைக்கிளில் ஒரு கால் தரையில் ஒரு கால் வைத்துக்கொண்டு தலையை சாய்த்து பார்த்து 'மன்னி' என்று வாசலில் இருந்து கூப்பிடும் சம்பத், 'வாடா அம்மு' என்று உரிமையாக சம்பத்தை  உள்ளே கூப்பிடும் அம்மா, மனசு கோணாமல் எல்லோருக்கும் சாதம் போடும் பெரிய மன்னி, 'ங்கேன்னு நோஞ்சானா இருக்கா  இவளுக்கு சாதம் நன்னா பாத்து போடு' என்று சொல்லும், Wrயோட அப்பா,  .....இன்று இல்லாதவர்களின்  பெயர் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. இவர்களுடன் வாழ்ந்தது ,உறவாடியது ,பேசியது, வெளியில் போனது, அவர்கள் அன்பொழுக பார்த்துக் கொண்டது எல்லாம் இப்போது கடந்த காலமாகிவிட்டது.

நான் சொல்வதுதான் உண்மை என்று எழுதுகிறேன் இன்று நான். நாளை நானே கதையாகி விடுவேன். !!!!

எட்டி நின்று பார்த்தால் தெரிகிறது நாமும்  வாழ்க்கை என்னும்  புத்தகத்தில் ஒரு அத்தியாயம் தான். இன்னும் ஒரு தலைமுறை நினைவில் இருப்போம் , நாம் பெற்ற பிள்ளைகளுடன், அவரது பிள்ளைகளுடன்  ...... பின் வரும் சந்ததிக்கு ஜெயந்தி என்பது தெரியாமலே போய்விடும். அதுதான் வாழ்க்கை ... 
காற்றளவே வாழ்க்கை ... காற்று நம்மை கடந்து போய்விட்டால் நாமும் காற்றுடன் கலந்து விடுவோம். அன்றுவரை வாழ்வோம் அதை நினைவில் இருத்தியே 
அன்புடன் 
ஜெ 

Comments

Popular posts from this blog

இந்த சந்திப்பு.........

அங்கும் இங்கும் -கல்யாணமே வைபோகமே!

 அம்மா---உன்னை காணாமல்