பழைய நினைவுகள் புதிய பதிவில்!
இன்றைய காலையின் இனிய எண்ணங்கள்
தினமும் உற்சாகத்துடன் இருக்க என்ன செய்ய வேண்டும்? உண்மையாக வாழ்வை நேசிக்க வேண்டும். இதைச் சொல்லாமல் சொல்லி வலியுறுத்துவதுதான் இயற்கையின் நோக்கம் போல!
வாயிற்படியில் இறங்கி வாசலில் கால் வைக்கும்போது, சில்லென்ற பனித்துளி நிரம்பிய தென்றல் முகத்தை வருடும்போது, குளிர் குளிர் என்று எண்ணாமல் அனுபவிக்கும்போது தன்னால் மனதில் நேசம் பொங்குகிறது. விரைவாக நடந்து ரயில் நிலையத்திற்குச் செல்லும்போது, அந்தக் கணமே வாழ்வின் மிக முக்கியமான கணம் போலத் தோன்றுகிறது.
இந்த ரயிலில் பயணிக்கும்போது படைத்தவனையும், அவனது உயரிய படைப்பான நம்மையும் எண்ணி எண்ணி வியப்பேன் தினமும். எத்தனை வித்தியாசமான முகங்கள், உடல் அமைப்புகள், விந்தையான நடைமுறைகள், தனித்துவமான முகபாவங்கள்! கோபமாக சிலர், நம்மை அளவிடுவது போல் சிலர், பெரும்பான்மையான பலர் சின்ன சிரிப்புடன் ஒரு அன்பாக! உற்சாகத்துடன் ஒரு மகிழ்ச்சியான குரலில் "ஹாய்" என்போர் சிலர். ஒவ்வொரு நாளும் ஒரு அனுபவம். இந்த ரயில் பயணம் எட்டு நிமிடங்கள்தான். ஆனால் ஒரு உன்னதமான அனுபவம்.
ரயிலில் வந்து இறங்கி, பல்கலைக்கழக வளாகத்தில் நடந்து வரும்போது மகிழ்ச்சியும் துக்கமும் மாறி மாறி வந்து தாக்கியது. இந்த இரண்டு ஆண்டுகள் மிக அழகாக, மகிழ்ச்சியாக ஆனால் நிமிடங்களாகப் பறந்துவிட்டது.
நல்ல நண்பர்கள், சிறந்த ஆசிரியர்கள், பரந்த நூலகங்கள், சுத்தமான காற்று, சுறுசுறுப்பான நடைபயிலும் மாணவர்கள், ஆசிய, அமெரிக்க, ஆப்பிரிக்க மாணவ சமுதாயம், உயரமாக வளர்ந்த மரங்கள், அண்ணாந்து பார்க்கவைக்கும் கட்டிடங்கள், அமைதியான மதிய நேர வகுப்புகள் - எதைச் சொல்வது, எதை விடுவது?
57 ஆண்டு வாழ்க்கையில் மிகச் சிறந்த பருவம் இந்த இரண்டு ஆண்டுகள்தான். முடியும் நேரம் நெருங்குவதால் நிறைந்த உணர்ச்சிகள் ஒரு மென்கலவையாக! தூரிகையால் வர்ணங்களை நிறைத்த ஒரு ஓவியம் போல் உள்ளது நினைவுகள்.
நினைவுகள் மட்டும் இல்லாதிருந்தால் வாழ்க்கை என்பது மிக வெற்றாக இருக்கும்.
எதற்காக இங்கு வந்தேன், ஏன் படிக்கிறேன் - எதுவும் புரியாமலே படிப்பை முடிக்கும் தருவாயில் வந்துவிட்டேன். மேலும், ஒருவேளை சரஸ்வதி மஹால் நூலகம் மின்வடிவாக்கத்திற்கு ஒரு கருவி வேண்டும் என்பதால்தான் ரமணர் என்னைத் தேர்ந்தெடுத்தாரோ!
பொறுத்திருந்து பார்ப்போம்! போகிற போக்கில் காலம் அழகாகப் பாதை அமைக்கும். ஒரு சுமையும் எனக்கில்லை. கடப்பேன் ஒவ்வொரு அடியாக!
வாழ்நாள் முழுவதும் நேசத்துடன் அழகையும், அன்பையும் ரசித்துக்கொண்டு வாழும்...
ஜெ... (14/04/17)
"நீரிலே தோன்றி நீரிலே முடியும் நிமிட நேர நீர்க்குமிழி வாழ்வில் நிலையானது, நிமிடத்தில் உயிர் பெற்ற நட்பு" - ஜெ...
என்றாயினும் என்னைப் புரிந்தவர் யாராயினும் வந்து என்னிடம் சொன்னால் உணர்வேனோ என்னை?
தன்னைப் புரியாதவன்தானே இங்கு வந்து என்னைப் புரியவைத்தால் புரியுமோ என் நிலை?
ஜெ... 08/09/18
Comments
Post a Comment
leave your feedback please